பட்டியலினப் பெண் துன்புறுத்தல்… திமுக எம்எல்ஏ மகன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை ; இயக்குநர் பா.ரஞ்சித் வாய்ஸ்

Author: Babu Lakshmanan
19 January 2024, 1:31 pm
Quick Share

சென்னையில் வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்த திமுக எம்எல்ஏவின் மகன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் 18 வயது இளம்பெண் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரை எம்எல்ஏவின் மருமகள் அடித்து துன்புறுத்தியதுடன், பல்வேறு விதமாக கொடுமைப்படுத்தி வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த இளம்பெண்ணின் கையில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும், தினமும் வேலை செய்யச் சொல்லி அடித்து கொடுமைப் படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்தார். இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்திருந்தனர்.

இந்த சூழலில், இன்று சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மருமகள் மெர்லின் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்த திமுக எம்எல்ஏவின் மகன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 251

0

0