பணி ஆணை கிடைத்தும் பணியில் சேர விடாமல் அலைக்கழித்த நிர்வாகிகள்… மாற்றுத்திறனாளி பெண் கண்ணீர் மல்க காத்திருப்பு போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
13 July 2023, 9:28 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி நியமன ஆணையுடன் வந்த மாற்று திறனாளி பெண்ணை பணியில் சேரவிடாமல் நிர்வாகிகள் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டி மாற்று திறனாளி பெண் கண்ணீர் மல்க காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெய மலர்விழி (40). மாற்று திறனாளியான இவருக்கு தற்போது அரசால் மணவளாக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடையில் விற்பனையாளராக கடந்த 6ம் தேதி முதல் பணியாற்ற பணி நியமன ஆணை வந்துள்ளது.

ஜெபமலர்விழி கடந்த 6ம் தேதி பணியில் சேர அரசின் பணி நியமனை ஆணையுடன் மணவாளக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆனால், அங்குள்ள அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை பணியில் சேர அனுமதிக்காமல் காவல் நிலையத்தில் இருந்து தடையின்மை சான்று வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளனர்.

மலர்விழியும் தடையின்மை சான்றை வாங்கி வந்த நிலையிலும், அவரை பணியில் சேர விடாமல் தலைவர் மற்றும் ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும், பணிசேர பணம் கேட்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், இன்று மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு தனது தாயுடன் வந்து மேலதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க செல்போனில் தகவல் கொடுத்ததுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஐயப்பன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, விளக்கம் தர மறுத்து விட்டார்.

மாற்று திறனாளி பெண் ஒருவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்ற அரசின் பணி நியமன ஆணை பெற்றும் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை சங்க நிர்வாகிகள் பணியில் சேரவிடாமல் இழுத்தடிக்கும் சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Views: - 339

0

0