திமுக கவுன்சிலரை குடும்பத்துடன் வெட்டிய சம்பவம் : போலீசார் விரித்த வலையில் சிக்கிய கும்பல!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 11:59 am
DMK-Updatenews360
Quick Share

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : 5 பேர் கைது செய்த காவல் துறையினர்

கோவை அருகே மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர் 2 – வது வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருைடய மனைவி சித்ரா. தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டில் சித்ரா, அவருடைய கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்தனர்.
அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் திபுதிபுவென்று புகுந்தனர். அவர்களை பார்த்ததும் சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டு யார் நீங்கள்?, எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள்? என கேட்டு உள்ளனர்.ஆனால் அதற்குள் ஆவேசமாக வந்த கும்பல் அரிவாளால் கவுன்சிலர் சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோரை சரமாரியாக வெட்டியது.

அதை தடுப்பதற்காக மகன் மோகன் ஓடி வந்தார். உடனே அவரையும் அந்த கும்பல் அாிவாளால் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவர்கள் 3 பேரும் கூச்சல் போட்டனர். அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

அவர்களை பார்த்ததும் முகமூடி கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடியது.
இதை அடுத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய கவுன்சிலர் சித்ரா, ரவிக்குமார், மோகன் ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். அதை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்து உள்ளார்.

இதற்காக ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த கமிஷன் தொகையை சித்ரா கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தினரை சந்தித்து ராஜா தகராறு செய்து உள்ளார்.

இந்த நிலையில் தான் இரவு ராஜா தனக்கு தெரிந்த 4 பேருடன் முகமூடி அணிந்து சென்று சித்ரா உள்பட 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.அதன்பிறகு ராஜா உள்ளிட்ட 5″பேரும் தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர் ராஜாவை தேடி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துப்பாண்டி (24), முகேஷ்கண்ணன் (22), பிச்சை பாண்டி (23), ஶ்ரீரக்சித் (18) ஆகியோருடன் சென்று அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது.

பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை அருகே தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவரின் வீட்டிற்குள் முகமூடி கும்பல் புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 217

0

0