‘அரசாங்கமே எங்களுடையது.. மண்ணு அள்ளகூட உரிமை இல்லையா…?’ ரெய்டுக்கு வந்த VAO… ஓட்டம்பிடித்த திமுக நிர்வாகி…!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 7:03 pm
Quick Share

அரசாங்கமே எங்களுடையது, அப்போ அரசு சொத்து எங்களோடது தானே என்று செம்மண் கடத்திய திமுக பிரமுகர், விஏஓவை கண்டவுடன் வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே மங்களத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் அண்டக்குளம் பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய பெருந்தலைவர் முத்து என்பவர் ஜேசிபி வாகனங்கள் கொண்டு டிப்பர் லாரிகளில் செம்மண்களை கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்ததை தொடர்ந்து, பெருங்களூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் திடீரென்று மங்கலத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் புகார் கூறிய இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, விஏஓவை கண்ட திமுக பிரமுகர் முத்து, “அரசாங்கமே எங்களோடது தான், எங்க அரசாங்கத்துல அரசு இடம் எங்களோடது தான், இதுல மண்ணு கூட அள்ள உரிமை இல்லையா,” என்று கூறியபடியே, ஜேசிபியையும் டிப்பர் லாரியையும் எடுத்துச் சென்றார்…

மேலும் புகார் தெரிவித்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை கிராம நிர்வாக அலுவலர் முன்பாகவே காலி செய்து விடுவதாக கூறிச் சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். தமிழக அரசு உடனடியாக செம்மண் கடத்தலில் ஈடுபட்டு வந்த திமுக நிர்வாகி மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்தபோது திமுக நிர்வாகி ஜேசிபி இயந்திரங்களை எடுத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 311

0

0