‘உன்னைய உருவில்லாமல் அழிச்சிருவேன்’… திமுக பெண் கவுன்சிலரை மிரட்டிய திமுக மண்டல தலைவரின் கணவர்…!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 4:15 pm
Quick Share

உன்னைய உருவில்லாமல் ஆழிச்சுவேன் என திமுக பெண் கவுன்சிலருக்கு மண்டலத் தலைவரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டல தொகுதியில் 7வது மண்டல கூட்டம் கடந்த ஏப்.26ல் நடைபெற்றது. இதில் 54வது வார்டு உறுப்பினர் நூர்ஜகான் தனது வார்டு பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்பினார். பின் கூட்டம் முடிந்து வெளியில் வந்த அவரை, மண்டல தலைவர் பாண்டியன் செல்வியின் கணவர் மிஷா பாண்டியன் என்பவர் அழைத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற உறுப்பினர் நூர்ஜஹான் கூறியதாவது :- இஸ்லாமிய மதத்தில் பெண்கள் வெளியே வருவது அரிது. எனக்கு மக்கள் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்து, அதனை செய்து வருகிறேன். மத்திய மண்டலக் கூட்டத்தில் நான் எனது வார்டு பிரச்னையை முன் வைத்தேன். கூட்டம் முடிந்து வெளியே வந்தது போது, மண்டலத் தலைவரின் கணவர் மீஷா பாண்டியன் அழைத்து ஒருமையில் பேசுயதோடு, மத ரீதியாக திட்டியதோடு, உன்னை உங்கள் பகுதியிலேயே உன்னை உருவம் இல்லாமல் அழித்து விடுவேன் என்று மிகக் கடுமையாக கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து மாநகர மாவட்ட செயலாளரிடமும், கட்சி தலைமையிடமும் இது குறித்து தகவலை கூறி உள்ளேன். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் உள்ள பொறுப்புகளில் அவரது கணவர்கள் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள நிலையில், இவர் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். அனைத்து அதிகாரிகளையும் கையில் வைத்துக்கொண்டு மற்ற வாடுகளில் பணிகளை நடத்த விடாமல் தடுக்கிறார். கண்டிப்பாக கட்சி இவர் மீது நடவடிக்கை என எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இது தொடர்பாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, எனது கணவர் மீது அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டினார். எனது கணவர் துணை மேயராக இருந்தவர். எனவே, அவரது ஆலோசனைகளை நான் கேட்டு பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இது போன்ற நிகழ்வு நடந்ததாக தனக்குத் தெரியாது என்றும், தான் அறையினுள் இருந்ததால் இது பற்றி தெரியாது என்றும், இது குறித்த சிசிடிவி காட்சிகள் மண்டல அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாண்டி செல்வி செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது, அவரது மகள் தன்னை வழக்கறிஞர் என அறிமுக செய்து கொண்டு மண்டலத் தலைவருக்கு ஒவ்வொரு குறிப்பாக எடுத்து எடுத்து கொடுக்கும் விஷயங்களும் செய்தியாளர் சந்திப்பில் நிகழ்ந்தன.

இது குறித்து திமுக முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 253

0

0