ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மகன்… நாடகமாடிய பெற்றோர் ; போலீசார் விசாரணையில் வெளியான கொலை சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
11 August 2023, 1:24 pm
Quick Share

குடிபோதையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தாட்கோ பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் -சாந்தாமணி தம்பதியினர். இவர்களது மகன் மணிகண்டன் (26). குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில், மணிகண்டனின் பெற்றோர் தினக்கூலிக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு வந்த மணிகண்டன் கடந்த ஒரு வாரமாக தாய், தந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மணிகண்டனின் பெற்றோர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கம் போல் குடிபோதையில் வந்த மணிகண்டன் தனது தாய் மற்றும் தந்தையுடன் ரகளையில் ஈடுபட்டு பின்பு போதையில் படுத்து உறங்கி உள்ளார். இதில் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டனின் தந்தை செல்வராஜ் கட்டையால் அடித்து மணிகண்டனை கொலை செய்துள்ளார். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, கொலையை மறைப்பதற்காக, தனது மகனை யாரோ, இரண்டு பேர் கொலை செய்து இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் முன் போட்டுவிட்டு சென்றதாக ஊத்துகுளி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் செல்வராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, குடிபோதையில் தங்களை கொடுமைப்படுத்தி வந்த மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார், மேலும், மணிகண்டனின் தாய் சாந்தாமணியும் கொலைக்கு உடந்தையாக இருந்ததால், போலீசார் மணிகண்டனின் தந்தை செல்வராஜ் மற்றும் தாய் சாந்தாமணி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 363

0

0