ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் போதை ஆசாமி அலப்பறை… காவல்நிலையத்தை பூட்டி வைத்து அட்டகாசம்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 2:19 pm
Quick Share

தருமபுரி : கடத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி நுழைவாயிலை பூட்டி, தலையில் இருந்து வடியும் ரத்தத்தை காவல் துறையினர் மீது தெளித்து ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலையத்தில் இன்று காலை மது போதையில் வந்த ஒருவர் காவல் நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். காவல்நிலைய நுழைவாயில் பூட்டி வைத்துக் கொண்டு, காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சார்ந்த அன்பு என்பது தெரிய வந்தது.

இவர் அடிக்கடி இது போன்று ஏதேனும் ஒரு பிரச்சனைகளுடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மது போதையில் தனது சொந்த ஊரில் பிரச்சனையில் ஈடுபட்டு தலையில் காயம் அடைந்து, ரத்தம் சொட்டும் நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அடாவடி செய்துள்ளார்.

மேலும், பணியில் இருந்த காவலர்கள் அன்புவிடம் பேசுகின்ற பொழுது மரியாதை குறைவாக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் காவல்துறையினர் அன்புவின் பேச்சை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

அப்பொழுது ஏற்கனவே தலையில் காயம் அடைந்து ரத்தம் சொட்டும் நிலையில் வந்திருந்தவர், தலையில் சொட்டுகின்ற ரத்தத்தை கையில் எடுத்து காவலர்கள் மீது தடவி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மது போதையில் வந்தவரை காவல் துறையினர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு வருகின்ற காலங்களில் இது போன்று நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. கடத்தூர் காவல் நிலையத்தில் போதை ஆசாமி ஒருவர் திடீரென ரகளை ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 256

0

0