தலைக்கேறிய போதையில் இரும்பு ராடை வைத்து அச்சுறுத்தல்… வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்..!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 10:02 pm
Quick Share

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றித் திரிந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பகுதியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பொதுமக்கள் வெளியே வருவதால் கூட்டம் இருமடங்காக இருக்கும்.

இந்நிலையில் நேற்று மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வந்தது. மாலை வேளையில் மது போதையில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் கையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றித் திரிந்தார். மேலும் வழியில் நின்றிருந்த ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் இளைஞரை தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கி உள்ளார். இதனால் பொதுமக்கள் இணைந்து வடமாநில இளைஞரை தடுத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காயமடைந்த இளைஞரிடம் விசாரித்த போது அவர் சஞ்சித் (33) என்பது தெரியவந்தது. மேலும் அதீத போதையில் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 320

0

0