தமிழகத்தை போராட்ட களமாக மாற்றிய திமுக… மத்தியில் ஆட்சியில் இருந்த போது மாநில அரசுக்கு பெற்றுத் தந்தை உரிமை என்ன..? ஜெயக்குமார் கேள்வி

Author: Babu Lakshmanan
1 February 2024, 6:02 pm
Quick Share

மத்தியில் ஆட்சி கூட்டணியில் திமுக இருந்தபோது மாநில அரசுக்கு எந்த உரிமையை திமுக பெற்றுத் தந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை திமுக அரசு தடுக்க தவறிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் நடந்த சம்பவத்துக்கு இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. இடைக்கால பட்ஜெட் என்பதால் அறிவிப்புகள் எதையும் வெளியிடாமல் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளது.

தமிழக மக்களை ஓரவஞ்சனையோடு பார்க்காமல் தமிழர்களும் இந்தியர்கள் தான் என்ற ரீதியில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க வேண்டும், தமிழக மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். மாநில பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்று இத்தனை ஆண்டு காலம் ஆகியும், மத்தியில் காங்கிரஸ் உடன் இருந்த திமுக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்..?

ஆளுநர் பதவிக்கு எதிராக செயல்படும் திமுக அரசு மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது எதிர்க்காதது ஏன்..? மதவாதத்திற்கு எதிராக திமுக பேசினாலும், 96 காலகட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று பதவி சுகங்களை அனுபவித்த இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். மத்தியில் ஆட்சி கூட்டணியில் திமுக இருந்தபோது மாநில அரசுக்கு எந்த உரிமையை திமுக பெற்றுத் தந்தது.

அதிமுக ஆட்சி செய்த பத்து ஆண்டு காலத்தில் ஏற்கனவே திமுக கடன் வைத்து சென்ற ஒன்றே முக்கால் கோடியுடன் சேர்த்து 2.50 லட்சம் கோடி மட்டும் தான் கடனாக வைத்திருந்தோம். தற்போது திமுக ஆட்சிக்கு வந்த முப்பது மாதங்களில் 5 லட்சம் போடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று வைத்திருக்கின்றனர்.

வீட்டு வரி உயர்வு, பத்திரப்பதிவு வரி உயர்வு, காலி மனைகளுக்கான கட்டண உயர்வு என பல்வேறு வரிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்த முப்பது மாதங்களில் உயர்த்தி விட்டது. அனைத்து தரப்பினரும் போராடும் வகையில் தமிழகத்தை போராட்ட களமாக விளையாடி திமுக அரசு மாற்றிவிட்டது.

பல்வேறு வகைகளில் கடன்களை பெற்று உள்கட்டமைப்பை மேம்படுத்தியதாக கூறுவது உண்மையான வளர்ச்சி அல்ல. அரசிடம் இருக்கும் நிதியை வைத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தான் உண்மையான வளர்ச்சி. ஏற்கனவே ஒவ்வொரு மது கடைகளிலும் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கி இருந்த நிலையில், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக மேலும் 10 ரூபாய் கட்டணத்தை ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ஆளும் விளையாடி திமுக அரசு உயர்த்தி விட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அதிமுகவுக்கு பெரிய ஆதரவுகளை பெருகி இருக்கும் நிலையில், திமுகவுக்கு எதிர்ப்பாலை நெருங்கியுள்ளது. அதிமுக தலைமையில் அமைவிருக்க கூட்டணி விபரம் குறித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் முறையாக அறிவிப்போம், என தெரிவித்தார்.

Views: - 242

0

0