கையில் அரிவாள்… பின்னணியில் சினிமா பாடல்… கெத்து காட்ட நினைத்த இளைஞருக்கு நடந்த சோகம்…!!

Author: Babu Lakshmanan
1 February 2024, 9:14 pm
Quick Share

தூத்துக்குடியில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் சினிமா பாடல் பின்னணியில் அரிவாளை கையில் வைத்து மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகே உள்ள சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதவன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் சினிமா பாடல் பின்னணியில் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து, இவர் மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் whatsapp ஸ்டேட்டஸில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில், வீடியோ வெளியிட்ட ஆதவனை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கும் விளைவிக்கும் வகையிலும் ஜாதி மோதல் உருவாக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுபவர்கள் மற்றும் சாகசம் என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து வீடியோ வெளியிடுபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாறு சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், வீடியோ வெளியிட்டது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Views: - 447

0

0