பிரதமர் மோடி சுயநலவாதி… உங்க முதுகில் இருக்குற அழுக்கை முதல்ல அகற்றுங்க : பாஜக மீது கேபி முனுசாமி கடும் விமர்சனம்!!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 5:41 pm
Quick Share

பாரத பிரதமர் நரேந்திர மோடி சுயநலம் மிக்க தலைவராக செயல்படுகிறார் என்றும், அரசு செலவில் தமிழகம் வரும் பிரதமர் ஈனுலையை பார்வையிட்டு கட்சி தேர்தல் கூட்டத்தில் பங்கேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய கேபி முனுசாமி கூறியதாவது :- தமிழகம் இன்று சர்வதேச அளவில் போதைப்பொருள் மற்றும் இடமாக மாறி உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் நலன், அக்கறையோடு இந்த அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சென்னையில் அதிவேக ஈனுலை பார்வையிடுகிறார். கட்சி நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் பிரதமர் தனியாக வரவேண்டும், ஆனால் இவர் ஒரு அரசியல் நிகழ்ச்சியை வைத்துவிட்டு பின்னர் கட்சி நிகழ்ச்சிக்கு வருகிறார்.அரசு செலவில் மிகப்பெரிய சுயநலத்துடன் பாரத பிரதமர் செயல்படுகிறார். ஒரு கட்சியின் தலைவர், பாரத பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி அவர்கள் தன்னை வளர்த்து ஆளாக்கிய பாரதிய ஜனதா கட்சி உருவாக்கிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி பற்றி பேசுவதில்லை.

கட்சியில் உள்ள முன்னோர்களைப் பற்றி பேசாமல் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, போன்ற மாற்றுக் கட்சியில் உள்ள தலைவர்களை பற்றி பேசி மக்களை ஏமாற்ற வேண்டும் என பேசுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் தலைமை ஏற்றுக் கொண்ட தொண்டர்கள், ஒருபோதும் நரேந்திர மோடியின் ஏமாற்று வேலைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனக் கூறினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டால் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சனங்கள் பேசுவது தொடர்பான கேள்விக்கு, அரசியல் விமர்சகர்கள் சிலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசுகின்றனர். ஆனால் இந்த தேர்தல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாக திகழும். நாட்டில் போதை பொருட்களின் இருப்பிடமாக குஜராத் மாநிலம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து குஜராத்துக்கு போதை பொருட்கள் வருகிறது.

அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்கிறது என ஆய்வறிக்கை சொல்கிறது. பாஜகவினர் முதலில் தங்கள் முதுகில் இருக்கின்ற அழுக்கை அகற்றுங்கள். தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்து விட்டது என பாஜகவினர் பேசுகின்றனர். தமிழகத்தில் உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் எண்ணிக்கை பாருங்கள், 16 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் செய்யாத பாஜகவினர் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அதிமுக கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை பொதுச் செயலாளர் அறிவிப்பார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை அதிமுக கூட்டணிக்கு அழைத்தது தொடர்பான கேள்விக்கு, அதிமுகவை பொறுத்தவரை யார் விரும்பி வருகிறார்களோ, அவர்களுடன் தான் கூட்டணி குறித்து பேசுவோம். மற்றொரு கட்சியில் இருக்கும்போது அவர்களை வலைவிரிக்கும் அளவிற்கு எங்கள் கட்சி பலவீனமான கட்சி அல்ல, என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார் தமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Views: - 131

0

0