இன்னுமா நம்மளை நம்புறாங்க… திமுகவின் தேர்தல் அறிக்கையை நினைச்சாலே வடிவேலு காமெடி தான் ; செல்லூர் ராஜு கிண்டல்

Author: Babu Lakshmanan
21 March 2024, 4:45 pm
Quick Share

மதுரையில் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் அப்படி பேசியிருப்பார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஐடி விங் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் அறிமுகப்படுத்தி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து, மருத்துவர் சரவணன் மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்து பேசியதாவது :- மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக மருத்துவர் சரவணன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இன்றிலிருந்து தீயாக அதிமுக வேட்பாளருக்கு வெற்றி பெறுவதற்காக அதிமுக தொண்டர்கள் பணி செய்ய உள்ளார்கள்.

தீவிரமாக பிரச்சாரம் செய்ய உள்ளார்கள். மேலும், நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிரிகள் இல்லை என்பதை உருவாக்கும் வகையில் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்ற உள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கனியை எடப்பாடியார் அவர்கள் கரத்தில் ஒப்படைக்கும் வரை களப்பணி ஆற்றுவோம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்க கூடிய ஈபிஎஸ் அவர்களுக்கு முதல் வெற்றியை மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றிக் கனியாக சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த நிலையில் இன்று தகவல் தொழில்நுட்ப பிரிவினருடைய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய காலகட்டத்தில் வாக்காளர்களை சமூக வலைதளங்கள் மூலம் எவ்வாறு சந்திப்பது வாக்குகளை எவ்வாறு சேகரிப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நமது மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சிரித்துக் கொண்டே இருக்கக்கூடிய அவரை, இதே சிரிப்போடு நாடாளுமன்ற தேர்தலுக்கு அனுப்ப உள்ளோம். நம்முடைய வேட்பாளர் எளிமையானவர், பல தேர்தலை சந்தித்தவர், மக்களிடத்தில் மிக எளிதாக கொண்டு செல்ல உதவும். அவர் களத்தில் இருப்பவர் புதியவர் அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் எத்தனை பேர் உள்ளார்கள். கட்சியில் மூத்த நிர்வாகிகள் உள்ளார்கள். ஆனால் மீண்டும் வெங்கடேசனுக்கு வாய்ப்பு கொடுத்தது கூட தோழர்கள் மத்தியில் ஒரு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிரணியில் இருக்கக் கூடிய வேட்பாளர் மதுரைக்கு ஒன்றுமே செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. இறுதியாக ஆறு மாதத்தில் ஏதோ செய்தார், அதன் பயனாக அவருக்கு சீட்டு கொடுத்துள்ளார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவை காட்டிலும் அதிமுக ஆபத்தானது என்று கூறியிருக்கிறார். உண்மையில் அவர் சுயநினைவோடு தான் அதை கூறினாரா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயிக்க வைத்தது அதிமுக.

2011ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியை கொண்டு வந்தது அதிமுக தொண்டர்கள் தான். எங்களைப் பார்த்து அவர் இவ்வாறு சொன்னது என்ன மனநிலையில் கூறினார் என்பது தெரியவில்லை, கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பொதுவாக நிதானமாக பேசுவார்கள்.
ஆனால் மதுரையில் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் அவ்வாறு பேசினாரா என தெரியவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணனை, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக பாஜகவினர் அனைவரையும் தான் அழைத்தார்கள். போகிற கட்சிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்கள்தான் எஜமானர்கள், யாராக இருந்தாலும் மக்களிடம் தான் வர வேண்டும்.

இரண்டு அரசும் என்ன செய்தது குறிப்பாக மத்திய, மாநில அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது
என்பதை மக்கள் எடை போட்டு பார்க்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை பார்த்தால் தமாசாக தான் இருக்கிறது. தேர்தல் அறிக்கையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. எத்தனை காலம் தான் இந்த தமிழக மக்களை ஏமாற்றுவார்கள். அவர்களது தேர்தல் அறிக்கையை பார்த்தால் வடிவேலு காமெடியை போல இன்னுமா நம்மளை நம்புகிறார்கள் என்பதைப் போல உள்ளது.

தமிழக மக்களுக்காக உரிமைக்காக என்ன செய்தார்கள், தமிழர்களுடைய வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் எவ்வளவு நிதியை பெற்றார்கள், ஏதாவது சாதனை இருக்கிறதா..? திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தை முடக்கிய வரலாறு இருக்கிறதா, ஒன்றுமில்லை..?

கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடிக்கக்கூடிய காலத்தை நாம் தற்போது பார்த்து வருகிறோம்.
திமுக ஆட்சியில் பிரதமரை வரவேற்க வெள்ளை குடை பிடிக்கக்கூடிய திமுக முதலமைச்சர், கருப்பு குடை பிடித்து கோ பேக் மோடி என்று சொன்ன திமுக. மக்கள் எல்லோரும் தற்போது விழிப்பாக இருக்கிறார்கள்.

அதிமுக சொல்வதைத்தான் செய்வோம், செய்வதே தான் சொல்வோம். அவ்வாறு தான் எங்களது தேர்தல் அறிக்கை வரும். ஏற்கனவே நான்கு ரூபாய் பெட்ரோலுக்கும், மூன்று ரூபாய் டீசலுக்கும் குறைப்போம் என்று சொன்னார்கள். ஆண்டுகள் மூன்று ஆகிவிட்டது ,என்ன நடைபெற்றது தற்போது. தமிழ் மக்கள் என்ன எதையும் தெரியாதவர்களா?? பெண்களை ஏமாற்ற முடியுமா?.?..,என்றார்.

Views: - 120

0

0