1972ல் கருணாநிதி ஆட்சிக்கு நேர்ந்த ஆபத்து… இப்போது CM ஸ்டாலின் ஆட்சிக்கும் நிகழும் ; செல்லூர் ராஜு கணிப்பு!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 10:45 am
Quick Share

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் 60 லட்சம் பேருக்கு கூட கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால் விதிமுறைகளை தளர்த்தி உள்ளனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை பரவையில் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அழைப்பிதழும் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களை மாநாட்டிற்கு அழைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;- அதிமுக மாநாடு தங்களுக்கான மாநாடாக மக்கள் நினைக்கிறார்கள். அதிமுக மாநாட்டால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இதுபோன்ற எழுச்சி எப்போதும் ஏற்பட்டதில்லை. 1972ல் கருணாநிதி ஆட்சியை அகற்ற மக்கள் ஒன்று சேர்ந்தார்கள். தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சியை அகற்ற அலைஅலையாய் மக்கள் அதிமுக கூட்டங்களுக்கு வருகிறார்கள், என தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் பெறும் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கலைஞர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முதல்வர் பெண்களுக்கு கொடுக்க நினைக்க டார்கெட்டை எட்ட முடியவில்லை. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் 60 லட்சம் பேருக்கு கூட கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால் விதிமுறைகளை தளர்த்தி உள்ளனர்.

இன்னும் என்னனென்ன செய்ய உள்ளார்கள் எனத் தெரியவில்லை. 1000 கொடுத்தால் மட்டுமல்ல ஒருகிலோ தங்கத்தை வீட்டுக்கு வீடு கொடுப்பதாக திமுக சொன்னாலும் மக்கள் அதை வாங்கவும், திமுகவுக்கு வாக்களிகவும் தயாராக இல்லை. சாதிக்கலவரம், மதக்கலவரம் நடப்பதால் திமுக ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள், என தெரிவித்துள்ளார்.

அதிமுக மாநாட்டிற்கு முக்குலத்தோர் அமைப்பினர் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு, “சில பேரின் தூண்டுதல் காரணமாக மாநாட்டை சில அமைப்பினர் எதிர்க்கிறார்கள்,” என்றார்.

Views: - 229

0

0