தமிழகத்தில் எடப்பாடியார்… இந்தியாவுக்கு பிரதமர் மோடி… இதுதான் தேசத்திற்கு பாதுகாப்பு ; பொள்ளாச்சி ஜெயராமன்..!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 4:07 pm
Quick Share

தமிழகத்தில் எடப்பாடியார, இந்தியாவில் மோடி பிரதமராக வருவது தேசத்துக்கு பாதுகாப்பு என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுகவினர் அதிகளவில் உறுப்பினர் சேர்த்ததற்கும், அதிமுக மதுரை எழுச்சி மாநாட்டிற்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:- இந்தியாவில் பல முதல்வர்கள் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளனர். ஆனால், இன்றளவும் உலகம் முழுவதும் பாராட்டு விதமாக ஒரு ஒப்பற்ற திட்டமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சத்துணவு திட்டத்தால் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பல கிராமத்து குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர் போன்று பல்வேறு துறைகளில் சாதித்துள்ளனர்.

எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை பெயர் பலகையை மாவட்ட ஆட்சியர்கள் அதை மறைக்க முயற்சித்து வருகின்றனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட பெயர் பலகையை மறைக்க முயற்சித்தால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை அறிவிப்பார். மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாடு உலகம் முழுவதும் மட்டுமின்றி பல கட்சியினரால் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

இனி யாரு நினைத்தாலும் அப்படி ஒரு பிரம்மாண்ட மாநாட்டை யாராலும் பூட்ட முடியாது என்ற நிலையில் அம்மாநாடு அமைந்தது. மீண்டும் எடப்பாடி யார் நினைத்தால் மட்டுமே அது போன்ற மாநாட்டை ஏற்பாடு செய்ய முடியும் அந்த அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுரையே குலுங்கும் அளவிற்கு மாநாடு வெகு விமர்சியாக நடைபெற்றது. மாபெரும் வரலாற்றுச் சாதனையை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

இதன் மூலம் மக்களுக்கு துன்பத்தையே கொடுத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி வீட்டுக்கு விரைவில் அனுப்பப்படும். திமுக கட்சி மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக முதல்வர் பொய்யாக பொதுமக்களிடம் நாடகமாடி வருகிறார். மாநாட்டின் வெற்றி என்பது தமிழக மக்களின் வெற்றி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைக்கு ஏற்ப பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பு.

அதேபோன்று விலைவாசிகள் அதிகரித்துள்ளது. ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறி ஆகிவிட்டது, திருப்பூரில் தொழில் முடங்கி விட்டது. அதேபோன்று, கோயம்புத்தூர், கரூர், ஈரோடு போன்ற நகரங்களிலும் தொழில் மொத்தமாக முடங்கி விட்டது. பால் விலை, குடிநீர் கட்டணம், வீட்டு வாடகை என அனைத்தும் உயர்ந்து சாமானிய மக்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமாகி உள்ளது. இதன் காரணமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எடப்பாடியார் தலைமையில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் அதிமுக அபார வெற்றி பெறும்.

இனி எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மாபெரும் வெற்றி பெறும். அதே போன்று மத்தியில் பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆனால், இந்திய தேசத்துக்கு பாதுகாப்பாக இருக்கும், என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன் அவர்கள் பேட்டியளித்தார். இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே. என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Views: - 214

0

0