கல்குவாரி மீது புகார் அளித்த விவசாயி வாகனம் ஏற்றிக்கொலை : 5வது நாளாக உடலை வாங்க மறுப்பு… சமூக ஆர்வலர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது

Author: Babu Lakshmanan
14 September 2022, 2:25 pm
Quick Share

கரூரில் கல்குவாரியை உரிமை இல்லாமல் இயக்குவதாக புகார் அளித்த விவசாயி மீது குவாரிக்கு சொந்தமான வாகனம் ஏற்றி கொலை செய்ததாகக் கூறி, 5வது நாளக உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குப்பம் அருகே தனியார் ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரி என செல்வகுமார்(45) நடத்தி வந்தார். இந்நிலையில், கல்குவாரி செயல்படும் கால முடிந்தும் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கனிமவளத்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனிமவளத்துறை அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் காருடையாபாளையம் அருகே ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு பதிவு செய்து, கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் சக்திவேல், ராணிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் என மூவரையும் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்,
பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் சமூகஆர்வலர்கள் முகிலன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் நிதிலிருந்து குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி, அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே விவசாயின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் என்று கூறிவந்தனர். இன்று ஐந்தாவது நாளாக கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனர். ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கினால் மட்டுமே உடலை எடுத்துச் செல்லப்படும் என்று சமூக ஆர்வலர் கூறி வந்தனர்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் முகிலனை கைது செய்து வாகனத்தில் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Views: - 561

0

0