தமிழகத்தில் முதன்முறை.. பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு : ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு சிக்கல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 12:47 pm
Palm Tree
Quick Share

தமிழகத்தில் முதன்முறை.. பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு : ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு சிக்கல்!

தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குன்னலூர் ஊராட்சியில் கீழ சேத்தி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி அவர்களின் கணவர் பூமிநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மயான பராமரிப்பு பணிகளுக்காக இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ள நிலத்தில் உள்ள பனை மரங்களை வெட்டியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் நேரில் சென்று விசாரணை நடத்தி அதன் பிறகு பார்த்திபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடையூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனை மரங்களை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் வெட்டிய குற்றத்திற்காக 427 பிரிவின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கையை திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச் சேரி ராஜா கூறுகையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது தமிழகத்தின் மாநில மரம் பனையை வெட்டிய குற்றத்திற்காக எடையூர் காவல் துறையினர் – வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர்.

இதுக்குறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் “தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைக்கான தனி நிதி அறிக்கையில் அறிவித்திருந்தும் பனை மரங்களை வெட்டி வீழ்த்தும் அவலநிலை தொடர்வதால் தமிழக அரசு உடனடியாக அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் அரசாணை பிறப்பிக்க வேண்டுமென வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார்

Views: - 419

0

0