சேமியா பாக்கெட்டில் இறந்து கிடந்த தவளை… சிக்கலில் அணில் சேமியா நிறுவனம் : உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2023, 7:23 pm
Anil Semiya - Updatenews360
Quick Share

சேமியா பாக்கெட்டில் இறந்து கிடந்த தவளை… சிக்கலில் அணில் சேமியா நிறுவனம் : உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காடேரி அம்மன் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் (37) உணவகம் நடத்தி வருகிறார். இவர் தீபாவளி உணவு தயாரிப்பதற்காக தனது கடை அருகில் உள்ள ஆனந்தம் மளிகை கடையில் பிரபல உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான
அணில் மார்க் கம்பெனி தயாரித்த சேமியா பாக்கெட் வாங்கி உள்ளார்.

இந்நிலையில், பாயாசம் செய்வதற்காக சேமியா பாக்கெட்டை பிரித்த போது, அந்த பாக்கெட்டுக்குள் இறந்த கிடந்த நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார். தொடர்ந்து தேவகோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்தனர் .

இதையடுத்து அணில் சேமியா தயாரிக்கும் திண்டுக்கல்லில் உள்ள தயாரிப்பு கூடங்களில் ஆய்வு செய்ய திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு வந்ததை தொடர்ந்து.

இன்று திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, லாரன்ஸ், சரவணகுமார், ஜாபர் சாதிக், முருகன் ஆகியோர் கொண்ட உணவு பாதுகாப்பு துறை குழுவினரால் திண்டுக்கல்லில் EB காலனி, செட்டி நாயக்கன்பட்டி மேட்டுப்பட்டி சிட்கோ பாடியூர் லட்சுமணபுரம் உள்ளிட்ட 7 பகுதிகளில் இயங்கி வரும் அணில் உணவு பொருள் தயாரிப்பு கூடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

சேமியா தயாரிப்பு முறையினை ஆரம்பம் முதல் இறுதி கட்டம் வரை தீவிர ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் தெரிவிக்கப்பட்ட பேட்ச் நம்பர் கொண்ட அணில் சேமியா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததை ஆய்வு செய்துள்ளனர். இருப்பிலுள்ள சேமியா பாக்கெட்டுகளை தற்காலிகமாக விற்பனை செய்யக் கூடாது என்று தயாரிப்பாளருக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இருப்பு அறை தயாரிப்புக் கூடங்களில் பயன்படுத்தும் குடிநீர், பணியாளர்கள் தன் சுத்தம் பேணுதல், விநியோக அறை ஆகிய இடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

பூச்சி வகையோ, ஊர்வன வகையோ தயாரிப்புக் கூடத்திற்கு வர ஏதுவான காரணங்கள் உள்ளதா என்று கண்டறியப்பட்டு ஒவ்வொரு தயாரிப்பு கூடங்களிலும் கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரி செய்ய உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு 32ன் படி மேம்பாட்டு அறிவிப்பு வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு தயாரிப்பு பொருளிலிருந்தும் சட்டம் சார்ந்த மற்றும் கண்காணிப்பு உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கபெற்றவுடன் விற்பனைக்கு அனுப்பப்பட்ட புகாரிற்கு உள்ளான பேட்ச் எண் கொண்ட சேமியா பாக்கெட்டுகள், பொருட்களை திரும்பப் பெறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தயாரிப்பாளர் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 313

0

0