அரசு பெண் ஊழியர் அதிமுக ஆதரவாளர் என்பதால் இடமாற்றம் : நியாயம் கேட்ட பெண்ணை தாக்கிய தொ.மு.ச நிர்வாகி!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2021, 11:35 am
திருப்பூர் : அரசு போக்குவரத்து பெண் ஊழியர் திடீர் இடமாற்றத்தை ஏற்காமல் நியாயம் கேட்டதற்கு அதிமுக ஆதராவாளர் என்பதால்தான் செய்தோம் என ஒருமையில் திட்டி தாக்கிய தொமுச நிர்வாகியை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் ஸ்டோர் மேனேஜ்மென்ட் இல் வேலை செய்து வருபவர் ரேவதி (வயது 26). இவரது கணவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் உடுமலை சாலையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ரேவதியின் வேலை பணி மாறுதல் தொடர்பாக தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் திமுகவைச் சேர்ந்த நல்ல சேனாபதி என்பவரை சந்தித்துள்ளார்.
தற்போது பணி செய்துவரும் தாராபுரம் போக்குவரத்து பணிமனையில் வேலையை தொடர்ந்து செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தொமுச தொழிற்சங்க நிர்வாகியான நல்ல சேனாபதி ரேவதியை பார்த்து நீ அதிமுக ஆதரவில் 2014ஆம் ஆண்டு பனையில் அமர்த்தப்பட்டவர். ஆனால் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. நீ அதிமுக ஆதரவாளராக இருப்பதால் தாராபுரம் டிப்போவில் வேலை செய்வதற்கு உனக்கு இடம் கிடையாது என ஒருமையில் திட்டியுள்ளார்.
அதற்கு தனது 6 வயது குழந்தை உள்ளதால் குழந்தையின் படிப்பு பாதித்துவிடும் ஆதலால் தனக்கு தாராபுரம் டிப்போவில் தொடர்ந்து பணியாற்ற உதவிடுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதை பொருட்படுத்தாத தொழிற்சங்க திமுக நிர்வாகி நல்ல சேனாபதி இவரை தகாத வார்த்தையில் திட்டி அடித்து துன்புறுத்தி உள்ளதாக ரேவதி தெரிவிக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி பேருந்து பணிமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தாராபுரம் போலீசார் அவரை அழைத்து பேசினர். இதைத்தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அடிபட்ட காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை பெற்று வருகிறார்.
தனக்கு நியாயம் கிடைக்கும்வரை உறுதியாக நின்று தனது கணவருடன் சேர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
0
0