அரசு உதவிப் பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து… மாணவிகள் காயம்… வலியோடு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 8:17 pm
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ‌அருகே எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று 10வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு எழுத வந்த மாணவிகள் அங்குள்ள கழிவறை பகுதிக்கு சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வர்ஷினி இசக்கி பிரியா, விஜயா ப்ரியா, மாரியம்மாள், மகரஜோதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

அரசு பொது தேர்வு நடைபெற்றதால் தேர்வு எழுதிய பின்னர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று ஆசிரியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. உடலில் ஏற்பட்ட காயத்துடன், வலியையும் பொறுத்துக் கொண்டு மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த நிலையில், தற்போது எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 272

0

0