எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும்.. தவறுகளை சுட்டிக்காட்டும் போது நெஞ்சு வலி வரக்கூடாது : ஆளுநர் தமிழிசை சௌந்ததரராஜன் கிண்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2023, 9:59 pm
Tamilisai - Updatenews360
Quick Share

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்பன் கழகம் சார்பில் 40வது ஆண்டு கம்பன் விழா மூன்று நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இன்று மாலை முதல் நாள் விழாவினை புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர் கம்பன் ராமனை பற்றி பேசும்போது ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஒரு அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் அன்றைய காலகட்டத்தில் தசரதன் ராமா நீ நாடாளுகிறாயா என்று கேட்டாலும் அதே சிரிப்பு தான். காட்டுக்கு வனவாசம் செல்கிறாயா என்று கேட்டாலும் அதே சிரிப்பு தான். ராமனின் முகத்தைப் பற்றி கம்பன் வர்ணிக்கும் போது ஓவிய தாமரைப் போல இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

தாமரையை பற்றி பேசினால் எனக்கு பிடிக்கும் இயற்கை தாமரை கூட கொஞ்ச நேரத்தில் வாடிவிடும் ஆனால் ஓவிய தாமரை வாடாதே அப்படித்தான் ராமனின் முகம் இருந்ததாக கூறுகிறார்.

காட்டுக்குப் போக வேண்டும் என்றாலும் அதே மலர்ச்சி நாடாள வேண்டும் என்றாலும் அதே மலர்ச்சி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிலர் நாடாண்டு கொண்டிருப்பார்கள். தவறான இடத்தில் சில தவறுகளை சுட்டிக்காட்டி சோதனை நடத்த வந்தால் அவர்களுக்கு நெஞ்சு வலியே வந்து விடுகிறது.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் நாம் ஒரே நிலையில் தான் இருக்க வேண்டும் என்பதைத்தான் கம்பர் ராமன் மூலம் நமக்கு சொல்லுகிறார் என்று சூசகமாக பேசினார்

தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ் மொழியை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது தமிழ் நிச்சயம் வாழும் பிற மொழியால் ஒருபோதும் தமிழை அழிக்க முடியாது.

தமிழால் தான் பிறமொழிகள் வாழும் ஆனால் நம் தாய்மொழி இல்லாமல் மற்றொரு மொழியை கற்கும் போது தான் தமிழில் உள்ள பெருமைகளை மற்ற மொழிகளுக்கு நாம் எடுத்து செல்ல முடியும்.

அதேபோல பிற மொழிகளில் உள்ள சாத்திரப் பெருமைகளை தமிழன் அறிய முடியும் கம்பர் வடமொழி கற்றதனால் தான் நம்மால் ராமாயணத்தை அறிய முடிந்திருக்கிறது எனவே மற்ற மொழிகளை கற்பதால் தமிழில் பெருமை உயரும் என்று குறிப்பிட்டார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கம்பன் ராமனை பற்றி பாடியதால் தமிழகத்தில் அவரைக் கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள் தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் கூட அவரை புறம் தள்ளுகிறார்கள்.

கம்பன் கழகங்கள் எப்படி அவரை கொண்டாடுகிறதோ அதேபோல அனைத்து அரசியல் கழகங்களும் அவரை கொண்டாட வேண்டும் அரசாங்கம் மூலமாகவே கம்பனுக்கு விழா எடுக்க வேண்டும் என்றார்.

ராகுல்காந்தியின் இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு தீர்ப்பாக சொல்ல மாட்டேன் நான் ஆளுநர் அரசியல் குறித்த எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று கூறி சென்றுவிட்டார்.

Views: - 242

0

0