இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தல் : 4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

Author: kavin kumar
11 February 2022, 1:44 pm
Quick Share

திருச்சி : திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை மேற்கொண்டனர்.

அதில் ஒரு வாகனத்தில் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் அதிகாரிகளில் விசாரணை மேற்கொண்டதில், அவர் திருச்சி மாவட்டம் ஒ.கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் செந்தில்குமார் (37) என தெரியவந்தது. இதையடுத்து கடத்திவரப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் துறையூர் காவல்துறையுடன் ஒப்படைத்தனர். மேலும் செந்தில்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Views: - 902

0

0