அடிப்படை வசதி செய்யாத அதிகாரிகளின் பட்டையை கழட்டிவிடுவேன் : அமைச்சர் துரைமுருகன் டோஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2023, 10:43 am
Duraimurugan - Updatenews360
Quick Share

அடிப்படை வசதி செய்யாத அதிகாரிகளின் பட்டையை கழட்டிவிடுவேன் : அமைச்சர் துரைமுருகன் டோஸ்!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று சுமார் ஐந்து கோடி மதிப்பில் 660 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை உள்ளிட்ட 13 துறைகளின் சார்பில் நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் பருவமழை காலங்களில், பாலாற்றில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில் பல இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாலாற்று பகுதியில், காவனூர் ,டி.கே.புரம் இறைவன்காடு, அரும்பருதி, 7 க்கும் மேற்பட்ட இடங்களில் தரையில் இருந்து 5 அடி உயரத்துக்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பருவ மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் பாலாற்றில் தேக்கி வைக்கப்பட்டு வேளாண் நிலத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படும்.

இதனால் மக்களின் நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இந்த வழக்கு தொடர்ச்சியாக நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வர உள்ளது.

அரசு அதிகாரிகள் மக்களுக்காக தான் பணி செய்கிறோம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை அன்புடன் வரவேற்று அவர்களின் தேவையை நிவர்த்தி செய்வது
தான் அரசு அதிகாரிகளின் கடமையாக இருக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளில் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் வேலூர் மாநகராட்சி உள்ள அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை காரணம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக புனரமைக்கப்படாமல் இருப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் நாளை அவர்களுக்கு பட்டய கிளப்படப்படும்.

கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால் தான் இந்த குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். கடந்த 53 ஆண்டுகளாக காட்பாடி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன்.

இதுவரை காட்பாடியில் நூற்றுக்கணக்கான திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் அமுது விஜயன் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் கவிதா தலைமையில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மரக்கன்றுகளை நட்டார்

அதனைத் தொடர்ந்து காட்பாடி அடுத்த பெரியபோடிநத்தம் பகுதியை சேர்ந்த வசந்தா (55) என்ற பெண் கடந்த 31ஆம் தேதி அதிகாலை ஆந்திராவில் இருந்து வந்த ஆண் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அரசின் நிவாரணத் தொகை 4 லட்சத்து 50 ஆயிரத்தை வசந்தாவின் கணவர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.

மேலும் வசந்தாவின் மகன் கார்த்திக்கு 2 மாதத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

Views: - 236

0

0