மதகில் அழுத்தி இளநீர் வியாபாரி கொடூரக் கொலை… கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் ; கள்ளக்காதலியின் கணவர் உள்பட 2 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
24 October 2023, 4:41 pm
Quick Share

கொலையில் முடிந்த கள்ளக்காதல் விவகாரமத்தில் இளநீர் வியாபாரியை கொலை செய்து வாய்க்கால் மதகிற்கு அடியில் ஒளித்து வைத்த கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட எருக்காட்டூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவருக்கு விசாலாட்சி என்கிற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜா திருவாரூரில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவரது மனைவி சங்கீதாவிற்கும் கடந்த ஐந்து வருடங்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இந்த தகாத உறவு குறித்து பல முறை வீரமணி, ராஜாவை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி சங்கீதாவின் வீட்டிற்கு சென்ற ராஜாவிற்ககும் ,சங்கீதாவிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜா சங்கீதாவை அடித்ததாகவும், பதிலுக்கு சங்கீதாவும் அவரது மகளும் கட்டையால் ராஜாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 18 ஆம் தேதியிலிருந்து ராஜா வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ராஜாவின் வீட்டில் ராஜா இளநீர் வியாபாரத்திற்காக இளநீர் கொள்முதல் செய்ய வெளியூர் சென்று இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாய்க்கால் மதகில் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது, ராஜாவின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது குறித்து கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த கொரடாச்சேரி போலீசார், மதகிற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராஜாவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, கொலை குறித்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், சங்கீதாவின் கணவர் வீரமணி மற்றும் அவரது மைத்துனர் சரவணன் (30) ஆகிய இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகின. கடந்த 18 ஆம் தேதி மதுபோதையில் எருக்காட்டூர் மதகிற்கு அருகே நின்று கொண்டிருந்த ராஜாவிடம், தனது மனைவியிடம் தகாத உறவு வைத்துள்ளது குறித்து கேட்டு வீரமணி மற்றும் சரவணன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜாவை அருகில் உள்ள வாய்க்கால் தண்ணீரில் அழுத்தி கொலை செய்து உடலை மதகிற்கு அடியில் மறைத்து வைத்ததாகவும் ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து, வீரமணி மற்றும் நாகை மாவட்டம் போலகத்தை சேர்ந்த அவரது மைத்துனர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜாவின் உடல் மீட்க பட்ட ஒரு மணி நேரத்தில குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 349

0

0