அமைச்சர் உதயநிதியின் காரை முற்றுகையிட்ட தம்பதி… குழந்தையோடு இழுத்து தள்ளி அப்புறப்படுத்திய போலீஸ்… அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு..!

Author: Babu Lakshmanan
20 July 2023, 2:23 pm
Quick Share

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் என்ற கிராமத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இரண்டு குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை தம்பதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் லட்சுமி என்ற தம்பதிகள், தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் வீடற்ற நிலையில் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டு மனை வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வந்தனர்.

இவர்களின் இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் துறையினர் இந்த தம்பதிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்கள். வீட்டுமனை பட்டா பெற்ற இவர்கள், எங்களுக்கான வீட்டுமனை எங்கே இருக்கிறது..? அதை காட்டுங்கள் என மீண்டும் வருவாய்த்துறையை நாடி கேட்டு வந்தனர்.

வருவாய்த் துறையினர் உலகங்காத்தான் கிராமத்திற்கு சென்று வெங்கடேசன் – லட்சுமி தம்பதிகளுக்கு நேற்று முன்தினம் அரசு இடத்தில் இடம் ஒதுக்கி அதில் கல்நட்டு தந்துள்ளனர். ஆனால், இதனை ஏற்காத அக்கம்பக்கத்தினர் வெங்கடேசன் – லட்சுமி தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு தராமல், வருவாய்த் துறையினரால் நடப்பட்ட கல் போன்றவற்றை பிடுங்கி எறிந்து விட்டு, வெங்கடேசன் – லட்சுமி தம்பதி அந்த இடத்திற்கு வரவிடாதபடி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நொந்து போன வெங்கடேசன் – லட்சுமி தம்பதியினர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என எண்ணியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த உலகங்காத்தான் கிராமத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து பொதுமக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை அளித்துக் கொண்டிருந்தார். நலத்திட்ட உதவிகளை அளித்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறிய போது, அப்போது அங்கு வந்த இந்த வெங்கடேசன் லட்சுமி தம்பதியினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை முற்றுகையிட்டு, நின்று தங்களுடைய வேதனைகளை அமைச்சரிடம் கூறினார்கள்.

அப்போது இதனை கண்ட காவல்துறையினர் அந்த வெங்கடேசன் – லட்சுமி தம்பதிகளை உடனடியாக தடுத்து தள்ளி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, இதனை கண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், அமைச்சரின் காரை முற்றுகையிட்ட அந்த வெங்கடேசன் – லட்சுமி தம்பதிகளிடம் சென்று உங்களது பிரச்சனைகளை நான் தீர்த்து வைக்கிறேன், உங்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டித் தருகிறேன் என கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்.

இருந்தும் அந்த வெங்கடேசன் லட்சுமி தம்பதியினர் ஆவேசப்பட்டு தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், வெங்கடேசனிடம் அமைதியாக இரு உன்னுடைய பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என தோள் மீது கை வைத்து தட்டி தடவி ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 260

0

0