பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை… 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரிவேஞ்ச்..? 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை…!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 2:52 pm
Quick Share

நான்கு கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உலக அளவில் பட்டு சேலை உற்பத்தியில் முதலிடத்தில் வகிக்கும் சுற்றுலா மற்றும் தொழில்துறை மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக பொருளாதார குற்றங்களும் ஆதாயக் கொலைகளும் அதிகரித்து வருகின்றது. ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை தற்போது புலனாய்வில் மிகவும் பின்தங்கி வருவதை கண்கூடாக காண முடிகிறது.

அதற்கு எடுத்துக்காட்டாக காஞ்சிபுரம் நகரில் ஏற்கனவே நடந்த கொலைகள் தொடர்பாக குற்றங்கள் நடைபெறும் என பொதுமக்களே பேசப்பட்டு வருகின்ற நிலையில், அந்த குற்றவாளிகளை கண்காணிக்காத காரணத்தினால் இன்று ஒரு ரவுடி பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டது காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபா என்ற பிரபாகரன். வயது 35. ஏ நிலை ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகளும் 20 க்கும் மேற்பட்ட , கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் மறைந்த தாதா ஸ்ரீதர் தனபாலின் உறவினரான பிரபல ரவுடி தினேஷின் கூட்டாளியான பொய்யா குளம் தியாகுவின் துணையுடன் பிரபா என்ற பிரபாகரனும், அவருடைய தம்பி மண்டேலா என்பவரும் சேர்ந்து, பணம் கேட்டு தொழிலதிபர்களிடம் மிரட்டல், கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பல்லவர் மேடு புதுப்பாளையம் பகுதியில் பிரபா என்ற பிரபாகரன் இன்று பட்டப் பகலில் தலை மற்றும் கழுத்து, முகம் போன்ற பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த 4க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பிரபாகரனை படுகொலை செய்து விட்டு காரில் ஏறி தப்பியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஏடிஎஸ்பி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதேபோல் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தேமுதிக கட்சியின் நிர்வாகி சரவணன் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் விதமாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள சரவணனின் உடன் பிறந்த தம்பி ரகு என்பவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே பகுதியில் 3 கொலைகள் மேல் நடந்து உள்ளதால் இந்தப் பகுதியில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. புறக்காவல் நிலையம் துவங்கப்பட்ட நாள் முதல் இன்றைய தேதி வரையில் அது பூட்டியபடியே உள்ளதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகுகிறது. சிவகாஞ்சி புற காவல் நிலையம் துவங்கப்பட்ட பின்னர் இரண்டு கொலைகள் நடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபா என்ற பிரபாகரன் கொலை வழக்கை கண்டறிய மூன்று தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பட்டப் பகலில் கொலை நடந்த சம்பவம் காஞ்சிநகரில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Views: - 392

1

0