கொலைக்கு ரிவேஞ்ச்… வாலிபரை கடத்தி தலையை துண்டித்து கொலை ; காஞ்சியை உலுக்கிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 4:31 pm

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை காரில் கடத்திச் சென்று கை கால்களை கட்டிப்போட்டு தலையை தனியாக துண்டித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலைக்குட்பட்ட வெண்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித் (27). திருமணமாகாத இவர் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் தம்பி, தங்கைகளுடன் வசித்து வருகிறார். கஞ்சா போதைக்கு அடிமையான அஜித், தன் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா வாங்கி புகைப்பதும், விற்பதும், அடிதடி திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடுவதும் தொழிலாக செய்துள்ளார்.

எந்த வேலை வெட்டிக்கும் செல்லாத அஜித் மீது வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா போதையில் உள்ளே நுழைந்து தகராறு செய்ததை முன்னிட்டு, அஜித்தை கைது செய்து வாலாஜாபாத் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

அப்பொழுது, கொலை குற்றவாளிகள் வெளியே சுற்றி கொண்டிருக்கும் நிலையில், என்னை போய் பிடிக்கலாமா என போதையால் உளறி கொட்டினார். அஜித் அளித்த தகவலை அடுத்து பல மாதங்களுக்கு முன்பு காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நபர், ஏரியில் கொலை செய்யப்படடு வீசப்பட்ட சடலத்தை காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.

ஜெயிலில் அடைக்கப்பட்ட அஜித் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தின் மூலம் பிடிவாரண்ட் போடப்பட்டு வாலாஜாபாத் காவல்துறையினர் அஜித்தை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில் அஜித்தை மூன்று மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்று கை கால்களை கட்டி போட்டு உடல் வேறு, தலை வேறு என படுகொலை செய்து, சடலத்தை வள்ளுவப்பாக்கம் காலனி பகுதியிலும், தலையை தாங்கி பகுதியிலும் என வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர் .

தகவல் அறிந்து வந்த வாலாஜாபாத் காவல் துறையினர் தலை மற்றும் உடலை மீட்டு எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் ரௌடிகள் அதிகரித்து வருவதை கண்டு கொள்ளாமல், காவல் துறையினர் இருக்கின்ற காரணத்தினால் தான் மேற்கண்ட கொலைகள் அரங்கேறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே அஜித்தை கொலை செய்ய மர்ம நபர்கள் தீவிரம் காட்டி வந்ததை உளவுத்துறையினரும், வாலாஜாபாத் காவல்துறையினரும் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!