பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. கஞ்சா விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெறிச்செயல்..!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 5:01 pm
Quick Share

திருவள்ளூர் அருகே கஞ்சா விவகாரத்தில் முன் விரோதம் காரணமாக, பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் செக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நாகராஜன். கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா விவகாரத்தில், நாகராஜை தொலைபேசி மூலம் அழைத்து வந்து, தனது கூட்டாளிகள் ரமேஷ் மற்றும் மோகன் உதவியுடன் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில். இது தொடர்பாக செக்கஞ்செரி வார்டு உறுப்பினர் பாப்பாத்தி என்பவரது மகன் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பிரபு, சோழவரம் காவல் நிலையத்தில் நகராஜின் தாயார் சாந்தி என்பவருடன் சென்று புகார் அளித்துள்ளார்.

இதனால், கோபமடைந்த விக்னேஷ் தனது கூட்டாளியுடன் சேர்ந்து பிரபு வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளார். பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், வீட்டில் இருந்த பிரபு மற்றும் அவரது உறவினர்கள் சிறுவர்கள் இருவர் என மொத்தம் 10 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

உடனடியாக தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, வெடிகுண்டு வீசிய விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் கைகளில் கத்தியுடன் வந்ததாகவும் அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர் .

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவான விக்னேஷ் கஞ்சா திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 540

0

0