இனி மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் விலை… ஏப்.,1 முதல் புதிய நடைமுறை ; கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
28 March 2023, 11:53 am
Quick Share

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து காலி மது புட்டிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களிடமிருந்து காலி மதுபானப் புட்டிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான காலிப்புட்டிகனை ஏப்ரல் 1ம் தேதி முதல் திரும்பப் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மதுபானங்களை வாங்கிப் பயன்படுத்திவிட்டு காலி மதுபானப் புட்டிகளைச் சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளை நிலங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் சிலர் வீசி வருகின்றனர்.

வனப்பகுதிகளில் வீசப்படும் காலி மதுப்புட்டிகளால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காவி மதுப்புட்டிகளால் சுற்றுப்புறமும் மாசு ஏற்பட வாய்ப்புள்ளது இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலேயே காலி மதுப்புட்டிகளை 01.04.2023 முதல் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படவிருக்கிறது.

அதன்படி 01.04.2023 முதல் கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபானப் புட்டிகளில் ரூ.10 கூடுதல் தொகைக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். பின்னர், வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான காலிப் புட்டிகளை மதுபானக் கடையில் திரும்ப ஒப்படைக்கும்போது, ஏற்கனவே பெறப்பட்ட 10 ரூபாய் திரும்ப வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும்.

இத்திட்டம் முழுமையாக நிறைவேற வாடிக்கையாளர்கள் காலி மதுபானப் புட்டிகளை, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் ஒப்படைத்து மாவட்டத்தின் வனப்பகுதியையும் விளை நிலங்களையும் மற்றும் பொது இடங்களையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 320

0

0