அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எங்கு நடக்கிறது..? புதிய மைதானத்திலா..? பழைய மைதானத்திலா..? ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்

Author: Babu Lakshmanan
23 December 2023, 4:15 pm
Quick Share

மதுரையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து விழா கமிட்டியினரோடு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டது. இதில், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விழா கமிட்டியினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தின் போது கேகே கண்ணன் என்பவர் ஒவ்வொரு முறையும் தென்கால் பாசன விவசாயிகளின் சார்பாகவே ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெறும். ஆனால் ஒரு சிலர் இடையூறு விளைவித்து கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமே நடத்தி வருகிறது. கிராம முறைப்படி எங்கள் சங்கமே ஜல்லிக்கட்டு நடத்த தாங்கள் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

காளையின் உரிமையாளர்களை பொறுத்தவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக டோக்கன் வழங்கப்பட்டாலும் கூட வரிசையின்படி மாடுகள் செல்லாமல் கடைசியில் இருக்கக்கூடிய மாடுகள் கூட முதலிடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இது போன்ற குளறுபடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும் எனவும், எந்தவித குளறுபடிகளுக்கும் இந்த முறை வாய்ப்பு இருக்காது, தாங்களும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கமாக நடைபெறும் மைதானத்திலேயே இந்த ஆண்டும் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Views: - 205

0

0