இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… திருமணமாகி 11 மாதங்களில் நடந்த சோகம் ; கூண்டோடு சிக்கும் கணவன் குடும்பத்தினர்..!!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 4:01 pm
Quick Share

பொன்னேரி அருகே திருமணமாகி 11மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத் தொடர்ந்து, மணமகனின் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேகர் – முத்துலட்சுமி தம்பதியரின் மகள் தனலட்சுமி (20). இவருக்கும் சிறுவாக்கம் சானார்பாளையத்தை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. தனலட்சுமியை அவரது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக தமது பெற்றோரிடம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார்.

தன்னை வீட்டிற்கு அழைத்து சென்று விடுமாறு பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அவரது பெற்றோரும் தங்களது மகளை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று தனலட்சுமி கணவர் குடும்பத்தினர் அவரது தந்தைக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். சிறிது நேரத்தில் உங்களது மகள் இறந்து விட்டதாக மீண்டும் போன் செய்து கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சேகர் மகளின் கணவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகளது சடலத்தை வைத்துள்ளனர்.

இதனையடுத்து தமது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பொன்னேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தன லட்சுமிக்கு 20 சவரன் நகை அணிவித்து திருமணம் செய்த நிலையில், மேலும் 5 சவரன் நகை பணம் கேட்டு வரதட்சணை கேட்டு, அவரை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாகவும், முரளி கிருஷ்ணனின் தாய் சிவகாமி மற்றும் அவரது தந்தை பழனி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பொன்னேரி போலீசார் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அங்கிருந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 332

0

0