கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. நூலிழையில் உயிர்தப்பிய மருதுசேனை தலைவர்… சினிமாவை மிஞ்சிய கொலை முயற்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 2:09 pm
Quick Share

மதுரை திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் நிறுவனை கொலை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டி என்ற இடத்தில், ஆதி நாராயணன் என்பவர் சென்ற கார் மீது சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை கண்டு உஷாரான ஓட்டுநர் சாமர்த்தியமாக சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கரை இறக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், அவருடைய கார் சேதமடைந்தாலும், ஆதி நாராயணன் உட்பட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இது குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி காவல் ஆய்வாளர் லட்சுமி லதா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஆதிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஏற்கெனவே எங்களது அமைப்பின் பொருளாளரை கொலை செய்த ஞானசேகரின் ஆதரவாளர்கள் மூலம் என்னையும் கொலை செய்யும் நோக்கில், எனது கார் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். கார் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினேன். காவல் துறையினர் இச்சம்பவத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யாவிட்டால், போராட்டம் நடத்துவோம், என்றார்.

இந்நிலையில் தன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காவல்துறையினர் தாமதப்படுத்தியதால், கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு, ஆதி நாராயணன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில், தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 121

0

0