மது அருந்தும் போது தகராறு… நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை ; சாக்கடையில் தள்ளி நடந்த கொடூர சம்பவம்!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 2:30 pm
Quick Share

மதுரை ; மதுரை அருகே குடிபோதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை – தேனி சாலையில் உள்ள அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாண்டி – விஜய லட்சுமி தம்பதியின் மகன் பாண்டி செல்வம் என்ற பாண்டீஸ்வரன். 25 வயதான இவர் டிராக்டர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் இரவில் மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள அரசு பொது சேவை மையத்தின் அருகில் அமர்ந்திருந்த போது, அங்கு மது போதையில் வந்த இளைஞர்கள் சிலர், பாண்டி செல்வத்துடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும், பாண்டியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்த போது, தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பானதில் மதுபோதையில் இருந்த கோபாலகிருஷ்ணன், பாண்டி செல்வத்தை அருகிலிருந்த கழிவு நீர் கால்வாய் பள்ளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் லேசான காயமடைந்த பாண்டிச்செல்வம் எழுந்திருக்க முயன்ற போது, ஆத்திரம் தீராத கோபாலகிருஷ்ணன், அருகில் இருந்த கல்லை தூக்கி மெக்கானிக் பாண்டிச் செல்வத்தின் தலையில் போட்டார். இதில் பலத்த அடைந்த பாண்டி செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், கோபாலகிருஷ்ணனும் உடன் இருந்த மற்றவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாண்டி செல்வம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பாண்டி செல்வம் இறந்ததை அறிந்து வந்த உறவினர்கள் கதறி அழுதனர். உறவினர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியதால் இறந்த பாண்டி செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மீட்க முயன்ற போது, பாண்டி செல்வத்தின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Views: - 366

0

0