பட்டப்பகலில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு… அலறி ஓடிய பொதுமக்கள் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 7:20 pm
Quick Share

தேனியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து ஒருவரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதுக்காலணி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் இதே பகுதியில் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இதே தெருவில் வசித்து வரும் தமிழன் என்ற நபருக்கும் முருகேசனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள போடி நகரின் முக்கிய பகுதியான பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஒரு பர்னிச்சர் கடையில், முருகேசன் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் கடைக்குள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பொழுது, இரு சக்கர வாகனத்தில் கடைக்கு வெளியே 3 பேர் வந்துள்ளனர்.

அப்பொழுது, இருசக்கர வாகனத்தில் இறங்கி வந்த தமிழன் கையில் வைத்திருந்த அரிவாளுடன் கடைக்குள் நுழைந்து முருகேசனின் கை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிவிட்டார். பின்பு ரத்த காயங்களுடன் இருந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி நகர் காவல் துறையினர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போடி நகர் காவல் துறையினர் தப்பியோடிய தமிழனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் போடி நகர் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரிவாள் வெட்டில் ஈடுபட்ட தமிழன் என்ற நபர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 351

0

0