11 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழி… நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் தலை துண்டித்துக் கொலை ; உறவினர்கள் தர்ணா

Author: Babu Lakshmanan
20 February 2024, 7:40 pm
Quick Share

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் கரூர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு குண்டு வீசிய 11 பேர் மீதான வழக்கு பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமர் பாண்டியன் (எ) ராமகிருஷ்ணன் என்பவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

நேற்று இந்த வழக்கில் உள்ளவர்கள் விசாரணைக்கு கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். இதற்காக, குற்றவாளி ராமர் (A1) மற்றும் கார்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தடாகோவில் அருகே காரில் வந்த ஒரு மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த ராமரை கொடூரமாக வெட்டி தலை துண்டித்துள்ளது. அவரது நண்பர் கார்த்திக் படுகாயத்துடன் கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமர் உடல் கரூர் அரசு மருத்துவமனை வைக்கப்பட்டுள்ளது. ராமர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உறவினர்கள், உடலை வாங்க மறுத்து குற்றவாளிகளை கைது செய்த கோரிக்கை வைத்தனர். உடலைப் பெற்றுக் கொள்ள போலீசாரின் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் கொலையாளியை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்ள முடியும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முன்பு அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், கொலையாளியை கைது செய்யக் கோரியும், காவல்துறையை கண்டித்தும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட ராமர் மனைவியுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போது காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள வாகனங்கள் மாற்று பாதையில் ஏற்பாடு செய்யப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. ராமர் கொலை சம்பவம் கரூர் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 398

0

0