சின்னம் இல்லாமல் தவிக்கும் துரை வைகோ… இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு

Author: Babu Lakshmanan
29 March 2024, 1:20 pm
Quick Share

சின்னம் இல்லாததால் துரை வைகோ பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அதிமுக வேட்பாளர் சூறாவளியாக சுற்றி வருகிறார்.

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க துவங்கிவிட்டது.

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் 27ம் தேதி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இதில் 56 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக நாகையில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக, அதிமுக, நாம் தமிழர், அமமுக , மற்றும் பல்வேறு கட்சியினர் சுயேசைகள் உட்பட 48 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதில் நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 10மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது 38 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாளை வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டால் எத்தனை பேர் இறுதியில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று மதியம் தெரிந்து விடும். இந்நிலையில் திருச்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சூறாவளியாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பம்பரம் சின்னம் கிடைக்காததால் அவர்கள் பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு, தற்போது வேட்பாளராக போட்டியிடும் துரை.வைகோ திருச்சியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும், வணிகர்கள், மத தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களை, சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

தங்களுக்கு சின்னம் கிடைக்கப்பெற்ற உடன் தங்களது பிரச்சாரத்தில் சூடு பிடிக்கும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் குக்கர் சின்னத்திற்கும், நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் ராஜேஷ் மைக் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு தங்களது அனல் பறக்கும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 115

0

0