2வது தலைநகரமாகிறதா மதுரை..? நான் சொன்னேனா…? செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கேஎன் நேரு சொன்ன பதில்!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 2:24 pm
Quick Share

இரண்டாம் தலைநகரமாக மாறுகிறதா மதுரை என்பது குறித்து அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்துள்ளார்.

மதுரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா ,மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்.பி சு.வெங்கடேசன், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1191 குடியிருப்புகளுக்கு 1926.76 கோடி மதிப்பில் 3 கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 84.12 கோடி மதிப்பில் வைகை ஆற்றங்கரைகளை மேம்படுத்தும் பணிகள், 23 கோடி மதிப்பில் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம், 3.50 கோடி மதிப்பில் மாநகராட்சி அலுவலகத்தில் பொன் விழா நுழைவு வாயில் மற்றும் அபிவிருத்தி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் “இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள நகர்புறங்களில் கூடுதலாக 50 % மக்கள் வசிக்கிறார்கள். தமிழக நகர்புற மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு கிராமப்புற மக்களை மையமாக கொண்டு குடிநீர் திட்டங்களை செயல்ப்படுத்தி வருகிறது, என பேசினார்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், “தமிழகத்தின் 2 வது தலைநகராக மாற்ற அமைச்சர் கே.என் நேரு உதவிட வேண்டும். மாநகராட்சி அளவில் 2 வது இடத்தில் மதுரை மாநகராட்சி இருந்தது. பிற மாநகராட்சி வளர்ச்சிகளில் தற்போது முன்னோக்கி சென்று உள்ளது. ஆகவே அமைச்சர் கே.என் நேருவின் கடைக்கண் பார்வை மதுரை பக்கமும் பட வேண்டும்,” என பேசினார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “ஒராண்டில் மதுரை மாநகராட்சியில் 717 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது, மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் 95 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் 107 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது, மதுரை மாவட்டத்தில் இராண்டில் 2,920 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. அமைச்சர் மூர்த்தி கோரிக்கைக்கு இணங்க மதுரைக்கு போக திருச்சிக்கு திட்டங்கள் கொடுத்தால் போதுமானது.

2வது தலைநகராக விளங்கும் மதுரையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 1,500 கோடி ரூபாய் மதிப்பில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணியில் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு பைப் லைன் அமைக்க வேண்டும். இப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து பைப் லைன் மூலம் கொண்டு வரும் அம்ரூத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்,” என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு கூறுகையில், “அடையாறு, பக்கீம், கூவம் போன்ற ஆறுகளில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. கழிவு நீரை சுத்தப்படுத்தி மீண்டும் நீரை ஆற்றுக்குள் விடும் பணிகளுக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலக்கிறது.

வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்படும், மதுரை 2ஆம் தலைநகர் மாற்றுவதற்கு அமைச்சர் மூர்த்தி கேட்டதற்கு பதில் அளித்தேன், 2வது தலைநகர் குறித்து முதல்வர் தான் அறிவிக்க வேண்டும்,” என கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமானவரித் துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துச் சென்றார்.

Views: - 269

0

0