குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்… புத்தாண்டு தினத்தில் கொடூரம் ; இரு வடமாநில இளைஞர்கள் கைது!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 5:03 pm
Quick Share

திருப்பூர் – காங்கேயம் பகுதியில் புத்தாண்டு நாள் கொண்டாடத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வடமாநில சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சிதமாரி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் நித்திஷ் குமார் வயது 23, ரூபேஷ் குமார் வயது 21. இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதி மருதுறையான் வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம்‌ தேதி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி படிப்பு வராத காரணத்தினாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தனது சொந்த ஊரில் இருந்து தனியாக வேலை தேடி பிழைப்புக்காக திருப்பூர் வந்துள்ளார். திருப்பூர் இரயில் நிலையத்தில் வந்து இறங்கி அந்த சிறுமி எதிர்பாராத விதமாக ரூபேஷ் குமாரை சந்தித்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டு இங்கு வேலை ஏதேனும் கிடைக்குமா? எங்கே தொழில் சார்ந்த கம்பெனிகள் உள்ளன? என்று விசாரித்து உள்ளார்.

அப்போது அந்த தேவையை பயன்படுத்தி கொண்டு தனியாக வந்த அந்த சிறுமியிடம் நான் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை வாங்கி தருகிறேன், தங்கு வசதியும் செய்து தருகிறேன் என பொய் வார்த்தைகள் கூறி, அங்கிருந்து காங்கேயம் சிவன்மலை பகுதியில் தான் தங்கிருந்த வாடகை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டின் உரிமையாளரிடம் பேசி புதிதாக ஆட்கள்‌ வந்துள்ளனர். எனவே இன்னொரு வீடு வாடகைக்கு வேண்டும் என கூறி பக்கத்து வீட்டின் சாவியை வாங்கி அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை கொண்டாட கேக் வெட்டலாம் என வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்துள்ளனர். பின்னர் பையில் வைத்திருந்த மது பாட்டில்களை எடுத்து குடிக்க கூறியுள்ளனர். மதுவை குடிக்க மறுத்த அந்த சிறுமியிடம் மதுபானம் கலந்த குளிர்பானத்தை ஊற்றி கொடுத்துள்ளனர். அதனை வெறும் கூல்டிரிங்க்ஸ் என நினைத்து குடித்த அந்த சிறுமி சில நிமிடத்தில் மயக்கமடைந்து உள்ளார்.

அப்போது நித்திஷ் குமார் அந்த சிறுமியை கட்டாய படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் ரூபேஷ் குமாரும் அந்த சிறுமியை கட்டாய படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, அந்த சிறுமியின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் அங்கு வந்துள்ளனர். உடனே அங்கிருந்து நித்திஷ்குமார் மற்றும் ரூபேஷ் குமார் ஆகிய இருவரும் ஓடிவிட்டனர். அப்போது அவர்களிடம்‌ நடந்ததை கூறியுள்ளார் அந்த சிறுமி.

இதனை அடுத்து காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காங்கேயம் மகளிர் போலிசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நித்திஷ்குமார் மற்றும் ரூபேஷ் குமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்‌.

Views: - 875

0

0