ஓடும் ரயிலில் 4 பயணிகளுக்கு அரிவாள் வெட்டு… வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தது ரயில்வே போலீஸ்…!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 2:44 pm
Quick Share

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் நான்கு ரயில் பயணிகளை கத்தியால் வெட்டிவிட்டு, அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன், பணம் மற்றும் உடமைகளை பறித்துச் சென்ற மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்ல கூடிய புறநகர் ரயிலானது, வழக்கம் போல் பத்து நாற்பத்தைந்து மணிக்கு புறப்படும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக நேற்று இரவு ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிய ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு சுமார் 12.30 மணியளவில் சென்றுள்ளது.

அப்போது ரயிலின் நான்காவது பெட்டியில் ஏறிய சுமார் 25 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் கொண்ட கும்பல் ரயிலில் பயணித்த மீஞ்சூரில் உள்ள மருந்தகத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய சுண்ணாம்புகுளத்தைச் சேர்ந்த மௌலி (24), சரத் (26) மற்றும் கும்மிடிப்பூண்டி உத்ராபதி (27), இலயராகவன் (22) ஆகிய நான்கு பேரிடம் விலை உயர்ந்த செல்போன், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் உடமைகளை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துள்ளனர்.

மேலும் 4 பேரையும் அறிவாளால் வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. ரயிலில் கும்மிடிப்பூண்டி வந்தடைந்த பாதிக்கப்பட்ட நான்கு நபர்களையும் ரயில்வே போலீசார் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்ற நான்கு பேரிடமும் ரயிலில் வழிப்பறி செய்யும் கும்பலின் புகைப்படங்களை காட்டி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று ரயில் நிலையங்களிலும் இரவு நேர ரயில்களில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ரயில் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Views: - 123

0

0