‘உங்க பாசத்திற்கு அளவு இல்லையா..?’ சிபாரிசு மூலம் ஒரு நபருக்கு இரு பதவியா..? அமைச்சருக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்..!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 2:36 pm
Quick Share

திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் PSO சிவகுரு என்பவருடைய மைத்துனருக்கு இரண்டு அரசு பதிவுகள் வழங்கியதை கண்டித்து அறந்தாங்கி நகர திமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் கிளை சிறைச்சாலையின் சுற்று சுவர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு எதிராக கண்டன போஸ்டர்களை திமுக தொண்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இந்த கண்டன போஸ்டரில் ரகுபதியின் காவல் அதிகாரியாக இருக்கும் சிவகுருவின் மைத்துனர் அறந்தாங்கியைச் சேர்ந்த காமராஜர் என்பவருக்கு ஏற்கனவே அமைச்சரின் சிபாரிசின்படி, தமிழ்நாடு வணிகர் நல சங்க வாரிய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும், தற்பொழுது கூடுதலாக தமிழக சிறைத் துறையின் ஜெயில் பார்வையாளர் என்ற கூடுதல் பதவியை வழங்கப்பட்டுள்ளதால் கொதித்து எழுந்த திமுக தொண்டர்கள் அமைச்சர் ரகுபதியையும், அவருடைய காவல் அதிகாரி சிவகுருவையும் கண்டித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

மேலும், அந்த போஸ்டரில் உண்மையான திமுக தொண்டர்களை அடையாளம் கண்டு உரிய பதவி வழங்காமல் சிபாரிசின் அடிப்படையில் பதவி வழங்கும் அமைச்சரின் பாசத்திற்கு அளவு இல்லையா என்று கேள்வி கேட்டுள்ளனர்.

மேலும் அமைச்சரின் இச்செயல் குறித்து உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசின் முதலமைச்சருக்கு அறந்தாங்கி நகர திமுகவின் உண்மை தொண்டர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போஸ்டரால் அறந்தாங்கி நகர திமுகவில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 207

0

0