நகைக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு… ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்த கும்பல்..!!

Author: Babu Lakshmanan
12 April 2022, 5:15 pm
Quick Share

நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி பைக்கில் வந்த மூவர் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து சென்றனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் புது மனைத் தெருவைச் சேர்ந்த அசனார் என்பவரது மகன் மைதீன்பிச்சை (55). இவர் வீரவநல்லூர் மெயின் பஜாரில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, நகைப் பையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது வீட்டின் அருகில் தெருவில் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகையை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பறித்துச் சென்ற நகைகளின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. சுமார் பல லட்சம் மதிப்பிலான நகைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. நகைகளை பறித்துச் சென்றவர்களை அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட எஸ்.பி சரவணன், சேரன்மாதேவி டி.எஸ்.பி ராமகிருஷ்ணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 644

0

0