அரசு ஊழியர் வீட்டில் அதிர்ச்சி… குடும்பத்தையே கட்டிப்போட்டு 50 சவரன் நகை கொள்ளை : 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
26 January 2023, 12:19 pm
Quick Share

அரசு போக்குவரத்து கழக நடத்துனரை குடும்பத்துடன் கட்டிப்போட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வி.எம். சத்திரம், ஜான்சி ராணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வணிதா தனியாா் நிறுவனத்தில் (ரிலையன்ஸ்) பணிபுாிகிறாா். இந்நிலையில் புதன் இரவு ராமசாமி அவரது மகள், மகன் மூவரும் வீட்டில் இருக்கும் போது இருசக்கர வாகனத்தில் ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் வீட்டில் புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள துணிகளைக் கொண்டு ராமசாமியை பிள்ளைகளுடன் கட்டி போட்டு 50 சவரன் நகை, செல்போன், பணம் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்துள்ளனர். சிறிது நேரத்தில் வேலைமுடிந்து வீட்டிற்கு வணிதா வந்துள்ளாா். வணிதா வரும் சப்தம் கேட்டு கொளளையர்கள் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த வணிதா கணவர் மற்றும் பிள்ளைகளின் கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளாா்.

உடனடியாக வெளியே வந்த ராமசாமி அவர்களை தேடியுள்ளாா். அதற்குள் மர்ம நபர்கள் தூத்துக்குடி சாலையில் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் சீனிவாசன் மற்றும் சரவணக்குமாா் ஆகியோா் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் போலிஸ் மோப்பநாய் வரவழைக்கப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கலைந்து கிடக்கும் பொருள்களை தடயவியல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடியரசு தின பாதுகாப்பு பணியில் போலீசார் அனைவரும் ஈடுபட்டிருக்கும் நிலையில், துணிச்சலாக வீட்டிற்குள் புகுந்து கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் நெல்லை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 289

0

0