சுங்கச்சாவடியில் புதிய கட்டண உயர்வு அமல்… ரூ.240 வரை கட்டணம் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2023, 1:58 pm
Toll Plaza - Updatenews360
Quick Share

சுங்கச்சாவடியில் புதிய கட்டண உயர்வு அமல்… ரூ.240 வரை கட்டணம் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் ஷாக்!!

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் இன்று முதல் வாகனங்களுக்கான சுங்க வரி கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரையிலான 74 கிலோ மீட்டர் தூரத்திற்கான நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.

சென்னையில் இருந்து வட மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் செல்ல வேண்டும் என்றால் இந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்ல கூடிய இந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க இதுநாள் வரை 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 5 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு 105 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 150 ரூபாயில் இருந்து 155 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க 180 ரூபாயில் இருந்து 185 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 265 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேப்போல் பேருந்து, லாரி, அச்சு வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.240 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 240 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, காய்கறி விலை உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வரும் சூழ்நிலையில் தற்போது சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 296

0

0