ஒரே நேரத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை : திருமணமான 5 மாதத்தில் சோகம்!!

Author: kavin kumar
24 January 2022, 4:42 pm
Quick Share

தஞ்சை : ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி திப்பியக்குடி ஊராட்சி, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த, நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் பிரபாகரன் (32). இவருக்கும், தெக்கூர் பகுதியை சேர்ந்த மும்மூர்த்தி மகள் அஜிதா (27) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பிரபாகரன், அஜிதா மற்றும் பிரபாகரனின் தாயார் மகேஸ்வரி ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். பிரபாகரனின் தந்தை ராமலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகேஸ்வரி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று மகேஸ்வரி ஒரத்தநாடு மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து மாலை பிரபாகரன் உறவினர் ஒருவர் பிரபாகரனை தேடி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் ஒரு அறையில் பிரபாகரன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் அருகிலேயே அஜிதாவும் பிணமாக கிடந்தார். அவரது வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளியவாறு இருந்தது. இதனால் அஜிதா விஷம் குடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாகரன், அஜிதா ஆகியோரின் உடல்களை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணமானமாகி 5 மாதங்களானதால், போலீசார் ஆர்டிஒ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Views: - 2115

0

0