பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டிய நாம் தமிழர் கட்சியினர்… சீமானின் பேட்டியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 1:09 pm
Quick Share

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில் நுட்ப பிரிவினர் ஒருமையில் பேசியதால் சீமானின் பேட்டியை புறக்கணித்து பத்திரிக்கையாளர்கள் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பாராளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், மற்றும் பொதுக்கூட்டம் இன்றும், (06.07.23) நாளையும் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை தனியார் விடுதியில் காலை 9 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பத்திரிக்கையாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் தனியார் விடுதியில் கூடி இருந்தனர். ஆனால் 10:15 மணியாகியும் சீமான் பேட்டி கொடுக்கும் கூடத்திற்கு வரவில்லை.

இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூடத்திற்கு வருகை தந்து, அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசி தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்து வெளியேறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Views: - 227

0

0