ரூ.1000 கொடுத்து பெண்களின் தாலியை அறுக்கும் திராவிட மாடல் ஆட்சி… கொட்டும் மழையிலும் ஆவேசமாக பேசிய காளியம்மாள்…!!!

Author: Babu Lakshmanan
11 July 2023, 11:45 am
Quick Share

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தாலியை அறுக்க நினைக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று அரூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் ஆக்ரோஷமாக பேசினார்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசியதாவது:- அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற செய்தி பெண்களிடையே வானத்தில் பறப்பது போல் உள்ளது. ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு கூடவே அவர்களுடைய தாலியையும் அறுக்க நினைக்கும் திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்த தயாராக உள்ளது.

படிக்கும் மாணவர்கள் பையில் கஞ்சா எடுத்து செல்வதற்கும், கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகுவதற்கும், தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசே கஞ்சா விற்பனை செய்கிறது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை.

ஒரு முறையாவது அவர் முகத்தை காட்ட வேண்டும். அல்லது இரண்டு இட்லி சாப்பிடுகிறார் என்ற செய்தியாவது சொல்ல வேண்டும். தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் அவலங்கள் ஏராளம். அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபு, உயிரோடு இருக்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்திற்கு சூலம் ஏற்றி வருகிறார்.

பொதுவாக இறந்தவர்களுக்கு தான் இவ்வாறு செய்வது வழக்கம். முதல்வர் செத்து விட்டால் அந்தப் பொறுப்பில் நாம் அமர்ந்து கொள்ளலாம் என்று அவ்வாறு செய்தாரா என்று தெரியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையில் மட்டும் 4,800 கோடி ரூபாய் கொள்ளை அடித்து எட்டு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் தக்காளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வெளி மாநிலங்களில் இறக்குமதி குறைவாக உள்ளது. அதனால் இந்த விலைவாசி அதிகரித்து உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

பொதுவாக தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் தக்காளி உற்பத்தி அதிகளவில் நடைபெறும். தற்போது, மூன்று மாவட்டங்களில் மட்டுமே தக்காளி உற்பத்தி நடைபெறுவதாகவும் சுட்டி காட்டினார்.

100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் பெண்களை கதை பேச வைத்துள்ளது. ஒரு குளத்தை வெட்டுவதற்கு 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த குளத்தை பார்ப்பதற்கு வடிவேல் செய்யும் காமெடி போல் குளத்தைப் பார்க்கச் சென்றால் அங்கு குளம் இல்லை. தற்போது காலை உணவு திட்டம் என்ற பெயரில் ரேஷன் கடையில் போடும் அரிசியை சமைக்கின்றனர். அந்த அரிசியை ஆய்வுக்கும் உட்படுத்தாமல் நேரடியாக மக்களின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரை மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். திமுக கூட்டத்திற்கு செல்லும் மகளிர் காவலர்கள் திமுக தொண்டர்கள் மூலம் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர். மனித குலத்திற்கு மிகவும் ஆபத்தான கட்சி ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தான்.

அதிமுக, திமுக, பாஜக மற்றும் பிற கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்

Views: - 216

0

0