ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு ; பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்… பதற்றத்தில் கிராமம்..!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 1:42 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே களியனூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் களியனூர் ஊராட்சியின் தலைவராக வடிவுக்கரசி ஆறுமுகம் செயல்பட்டு வருகிறார். இவருடைய கணவர் ஆறுமுகம் என்பவர் அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.

murder attempt - updatenews360

கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை வடிவுக்கரசி மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். பைக்கை வீட்டின் வாயிலில் நிறுத்திவிட்டு வடிவுக்கரசி வீட்டின் உள்ளே சென்றபோது, 2 மர்ம நபர்கள் பட்டாக்கத்தியுடன் ஓடி வந்து வீட்டின் வாயிலில் நின்றிருந்த ஆறுமுகத்தை தலை, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் வெட்டிவிட்டு ஓடி சென்று பைக்கில் ஏறி தப்பினர்.

murder attempt - updatenews360

படுகாயமடைந்த ஆறுமுகத்தை அப்பகுதி மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

அப்பகுதி மக்கள் இது குறித்து கூறும் போது , 2 பைக்கில் வந்த இளைஞர்கள் பைக்கை தள்ளி நிறுத்திவிட்டு அதில் இரண்டு பேர் ஓடி சென்று ஆறுமுகத்தை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு ஓடி சென்று மூன்று பேரும் இரண்டு பைக்குகளில் தப்பியதாக கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆறுமுகம் களியனூர் பகுதியில் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தன்னுடைய மனைவி வடிவுக்கரசியை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி கண்டார். சமீபகாலமாக கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஆறுமுகத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வாலாஜாபாத் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து ஆறுமுகத்தை வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால், களியனூர் பகுதியில் சற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Views: - 403

0

0