6 பேரின் விடுதலை மீது அதீத நம்பிக்கை இருந்துச்சு.. இன்று தான் எங்களுக்கு நன்னாள் ; பேரறிவாளன் நெகிழ்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
12 November 2022, 9:33 am
Quick Share

பேரறிவாளன் மற்றும் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் காஞ்சிபுரம் செங்கொடி நினைவிடத்தில் ஆறு பேர் விடுதலை பெற்றதை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஏற்கனவே பேரறிவாளன் பரோலில் வெளிவந்தார். நேற்று நளினி, முருகன் உட்பட ஆறு பேர் விடுதலை ஆயினர்.

இவர்களை விடுவிக்க கோரி செங்கொடி உயிர் தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில் , காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள செங்கொடியூருக்கு பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் வந்திருந்து, செங்கொடியின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், மே 18ஆம் தேதி விடுதலையான 7 பேரில் நான் ஒருவர் மட்டுமே வெளியே வந்தேன். மற்றவர்களின் விடுதலை குறித்து எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்தது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. இன்று தான் நான் நன்னாளாக கருதுகிறேன், என்று பூரிப்போடு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “எங்களின் தூக்கு தண்டனையை நிறுத்த எங்களுக்காக 15 ஆண்டுகளாக போராடி பேருதவியாக இருந்து இந்த தீர்ப்பினை பெற்று தந்த அனைவருக்கும் நன்றி. அதேபோல் ஊடகங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் நன்றி. விடுதலை அறிவிப்பை கேட்டவுடன் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்று தான் எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றதாக உணர்கிறேன்,” என தெரிவித்தார்.

அற்புதம்மாள் கூறும்போது, “இன்று அறிவித்த அறிவிப்பு எங்களுக்கு மேன்மேலும் புத்துணர்ச்சி அளித்துள்ளது. விடுதலையான 6 பேருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தர வேண்டுகிறேன்,” என்றார்.

Views: - 372

0

0