பாமக கூட்டணியே 2026ல் ஆட்சியைப் பிடிக்கும்… இதற்கான டிரெய்லரை அடுத்தாண்டு பார்ப்பீங்க : அடித்துச் சொல்லும் அன்புமணி ராமதாஸ்!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 6:24 pm
Quick Share

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பாஜகவின் கொள்கைகளை வெளிப்படுத்தி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியள்ளார்.

சென்னை அயனாவரத்தில் (AIOBC-REA) அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தென்மண்டல பொது செயலாளர் டாக்டர் ஆர். அப்சல், தலைமையில் தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியின் பின் செய்தியாளரிடம் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :- மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை முதலில் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். பீகார் மற்றும் கர்நாடக மாநிலங்கள் நடைபெறுவது போல, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்திய அளவில் அதிக அளவு இட ஒதுக்கீடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அரசியல் சாசன சட்ட திருத்தம் ஒன்பதாவது அட்டவணையின்படி இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதிலும் உச்சநீதிமன்றம் கை வைக்கப் பார்க்கிறது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் 69% மேல் இருக்கிறார்களா..? என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கிறது. அதை நிரூபிப்பதற்கு ஜாதி வார கணக்கெடுப்பு தேவை. ஜாதி வாரிக்கணக்கெடுப்பின் மூலம் இன்னும் அதிகமான இட ஒதுக்கீடு கூட தமிழ்நாட்டிற்கு வாங்க முடியும், எனக் கூறினார்.

தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:- தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கு எதிராக இந்த எதிர்ப்பும் கிடையாது. ஆளுநர் மாநில அரசுடன் இணைந்து முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால், இப்பொழுது உள்ள தமிழக ஆளுநர் அவரை நியமனம் செய்த கட்சி சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தி வருகிறார். அது தவறானது, நிச்சயமாக அதை தவிர்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி வந்து போராட்டத்தை நடத்தினார்கள் என்று ஆளுநர் குற்றச்சாட்டு வைத்தார். அதற்கான ஆதாரத்தை ஆளுநர் நிரூபிக்க வேண்டும். அப்படி கொடுத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். அது குறித்த வியூகங்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எடுப்போம்.

என்எல்சி விவகாரத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மூன்று பகுதிகளை ஏலப் பட்டியலில் இருந்து நீக்கியதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்று முறை ஏலப்பட்டியலில் சென்று யாரும் அதை எடுக்கவில்லை. இந்த மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் வராது என்று அமைச்சர் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ஏலப்பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதாக மட்டுமே சொல்லியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

என்எல்சி 1,1(A)&2 ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்துதல் நிறுத்தம் செய்ய வேண்டும். கடந்த 66 ஆண்டுகளாக எட்டல்ஸ் நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் பாதிப்பு போன்ற என்னென்ன பாதிப்புகள் என மூன்று மாதத்தில் ஆய்வு அறிக்கை தயார் செய்து, அதை அரசுக்கு அளித்து, பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நாளுக்கு நாள் எங்களின் போராட்டம் தொடரும், என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 224

0

0