கலைஞர் கோட்டம் திறந்தால் விவசாயிகளின் பிரச்சனை தீருமா..? எல்லாம் ஜால்ரா கட்சிகள்… பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 6:52 pm
Quick Share

கலைஞர் கோட்டம் திறந்தால் இங்கு இருக்கிற விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறிவிடுமா..? என்று பொள்ளாச்சி அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ;- பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலைப்பேட்டை ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் இரண்டு ஆண்டு காலம் சீரழிந்து விட்டது.

20 வருடத்திற்கு முன்பு எந்த விலைக்கு விற்றதோ, அதே விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது குறித்து தானும் எதிர்க்கட்சித் தலைவரும் பலமுறை சட்டமன்றத்தில் பேசியுள்ளோம். ஆனால், அதில் எந்த விமோசனமும் ஏற்படவில்லை. உர விலை, ஆட்கூலி போன்றவற்றால் விவசாயிகள் வேதனை பட்டு உள்ளார்கள்.

இதை நம்பி கொப்பரை வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் பெரு நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும் பொழுது கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை 140 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 70 ரூபாய்க்கு வாங்குவதற்கு கூட ஆள் இல்லை. இதைப் பற்றி எது சொன்னாலும் கேட்பதற்கு அரசாங்கத்தில் ஆள் இல்லை. இது குறித்து விரிவாக மாவட்ட தலைவரை சந்தித்து கூறியுள்ளோம். இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் விவசாயிகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மேலும் இது அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது. 20 வருடத்திற்கு முன்பாக விற்ற விலையே தற்போதும் இருந்தால் விவசாயிகளுக்கு எப்படி வாழ்வாதாரம் இருக்க முடியும்?, மருத்துவ செலவு எப்படி சமாளிக்க முடியும்..? என்பதனை முதல்வர் சிந்திக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல, பொள்ளாச்சியில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நடந்து முடிந்த வளர்ச்சி பணிகள் அனைத்தும் எந்த காரணமும் இல்லாமல் நிறுத்தி விட்டார்கள். 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. மேற்கு புறவழி சாலை இரண்டு ஆண்டு காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் கோவில்பாளையம் – வெள்ளலூரில் 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்த பணிகள் கூறப்பட்டு பணிகள் தொடங்காமல் அந்தப் பணியையும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.

பொள்ளாச்சியில் நகரத்தின் மையப் பகுதியில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது, 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு எட்டு மாடிக்கு மருத்துவமனை கட்டுவதாக தீர்மானிக்கப்பட்டது. ஐந்து மாடி கட்டப்பட்ட நிலையில் தற்போது அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மருத்துவமனை உடனடியாக கட்டி முடிக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும்.

மேலும், 71 கோடி ரூபாய் குடிநீர் திட்டம் முன்னாள் அமைச்சர் வேலுமணி அமைச்சராக இருந்தபோது, நிதி ஒதுக்கப்பட்டது. 2019ல் பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் இன்னும் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்து அடித்து வருகின்றனர், எனக் கூறினார்.

திருவாரூர் பகுதியில் கலைஞர் கோட்டத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வருவது குறித்தான கேள்விக்கு, எதிர்க்கட்சி ஒருங்கிணைந்து செயல்படுவதாக இருந்தால் விவசாயிகளுடைய பிரச்சனை தீர்க்க வேண்டும். கலைஞர் கோட்டம் திறந்தால் இங்கு இருக்கிற விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறிவிடுமா..? கரண்ட் பில், வீட்டு வாடகை, வீட்டு வரி, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, தண்ணீர் வரி போன்றவை உயர்ந்து மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

குரல் கொடுக்காத எதிர்க் கட்சிகள் செந்தில் பாலாஜி கைதிற்கு மட்டும் வேகமாக குரல் கொடுத்து வருகிறார்கள். அது எதிர்கட்சி அல்ல, ஆளுங்கட்சியின் உடைய ஊதுகோல். ஜால்ரா கட்சிகளை பற்றி கேட்காது, என்றார்.

சென்னை மழை நீர் தேங்கியது பற்றிய கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் இருந்த போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அதற்கு ஏற்றவாறு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி முடிந்து விட்டது. இவர்கள் அதனை செம்மையாக செய்து வெள்ள நீர் வடிவதற்கான பணிகளை செய்ய வேண்டும், என தெரிவித்தார்.

Views: - 361

0

0