சினிமா பாணியில் தப்பியோடிய கைதி : டீ குடிக்க சென்ற போது காவலரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் எஸ்கேப்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 6:40 pm
Prisone rEscape - Updatenews360
Quick Share

சினிமா பாணியில் தப்பியோடிய கைதி : டீ குடிக்க சென்ற போது காவலரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் எஸ்கேப்!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட் அருகே,கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் காவல் நிலையத்தை சேர்ந்த சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர், தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(35) என்ற நபர் திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள விசாரணை கைதியை திருட்டு வழக்கில் ஒன்றில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில்,திருடிய தங்க நகைகளை வைத்திருக்கும் இடம் குறித்து அறிய,கடந்த 17ம் தேதி கஸ்டடியில் எடுத்த கேரள காவல்துறையினர், தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை வழியாக திருச்சிக்கு அழைத்து சென்றனர்.

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது நள்ளிரவில் டீ சாப்பிட இறங்கிய காவலர்களிடம் கைதி பாலமுருகனும் பசிப்பதாக கூறியதையடுத்து அவருக்கும் பிரட் மற்றும் டீ வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது,
அப்போது சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிய பாலமுருகனுடன் சென்ற சார்பு ஆய்வாளர் அசோக்குமாரை தாக்கி தள்ளிவிட்டு விட்டு மின்னல் வேகத்தில் கைவிலங்குடன் இருட்டில் மறைந்து தப்பியோடினார்.

சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் குமரேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா தலைமையிலான காவல்துறையினர் காயம் அடைந்த காவல் ஆய்வாளர் அசோக்குமாரை நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து காவலரை தாக்கிவிட்டு கை விலங்குடன் தப்பி ஓடிய விசாரணை கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் திரைப்படப் பாணியில் விசாரணை கைதி ஒருவர் கை விலங்குடன் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 264

0

0